ஐநாவில் ஈழ தமிழர்களின் நீதிக்கான எதிர்கால செயல்பாடுகள்
ஐநாவின் அண்மைய 46/1 தீர்மானத்தின் பின்னடைவுக்கு பின் அடுத்த இரு வருடங்களுக்கு புலம் பெயர் தமிழ் ஆர்வலர்களும் அமைப்புகளும் தெளிவான திட்டங்களை அமைத்து வேலைகளை செய்வதுஅவசியம். அதிக ஆய்வுகளும் எதிர்வு கூறல்களும் விமர்சனங்களும் செயல்திட்டம் இல்லா விட்டால் பயன் தரப்போவதில்லை. இம்முறை ஈழ தமிழ் அரசியல் தரப்பிலிருந்து ஒருமனதாக கோரிக்கை மிக தெளிவாக முன்வைக்க பட்டது. 2015 இல் 30/1 தீர்மானத்தின் கலப்பு நீதிமன்றம் கடந்த 6 வருடத்தில் தோல்வியடைந்த நிலையில் து. சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சிறிலங்காவின் இனஅழிப்பு மற்றும் போர்க்குற்ற விசாரணைகள் ஐநாவால் பாரப்படுத்த வேண்டும் என்று நான்கு கோரிக்கைகள் தான் அவை. அவற்றில் எவையும் ஐநா உறுப்பு நாடுகளால் இம்முறை தீர்மானத்தில் உள்வாங்கப்படவில்லை மாறாக இலங்கை மீது ஒரு அழுத்தத்தை சீனாவிடம் முழுமையாக செல்லாமல் வைத்திருக்கும் விருப்பில் தான் இந்த தீர்மானம் உள்ளது. இதனால் ஐநாவில் புலம்பெயர் தமிழர்களின் எதிர்கால காத்திரமான செயல்பாடுகள் அவசியமானவை. மேற்கு தமிழீழம் போல வடக்கும் தமிழரின் பெரும்பான்மை இல்லாமல் போகும் வாய்ப்பு அதிகம் உள்ள நிலையில், தமிழர்களின் ஐநா முயற்சிகள் பின்வரும் தாற்பரியங்களை கொண்டதாக இருப்பது தான் தமிழருக்கு நன்மை.
1. ஈழ தமிழர் தமிழீழ நிலப்பரப்பின் பூர்விக குடிகள், (Indiginous people / Tamil Nation)
2. இறையாண்மை கொண்ட இனமாக தம்மை பாதுகாக்க அவர்கள் நடத்திய போராட்டம் நியாயமானது. (Tamil struggle for freedom is legitimate)
3. சிறிலங்கா தமிழர்கள் மேல் தொடர்ந்த இன அழிப்பை மேற்கொண்டு வருகிறது (Recognizing Sri Lanka's genocide against Tamils)
இவை பற்றி வெளிப்படையாக பேசும் தமிழ் அமைப்புகளுக்கு மட்டும் ஆதரவு கொடுப்பது தான் உகந்ததாக இருக்கும். சீனா சிறிலங்காவில் நிலை கொள்ள தொடங்கி இருக்கும் இந்த கால பகுதியை தமிழர்கள் முறையாக மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு விளக்கி எதிர்காலத்தில் பின்வாங்க முடியாத தீர்மானங்களை கொண்டுவர பாவிக்கலாம். சீனா முழுமையாக நிலைகொண்ட பின் இந்தியா மற்றும் உலக ஒழுங்கு சீனா சார்பாக மாறிவிடும் அதற்கு இன்னும்சில வருடங்களாவது தேவை. அதன் பின் தமிழர்களுக்கு இப்போது இருக்கும் வாய்ப்பு மற்றும் வெளிகள் குறைந்து செல்லும். சிறிலங்கா ஒருகாலத்தில் தமது மேலாண்மையின் கீழ் வரும் மற்றும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக தான் மேற்கு, ஐரோப்பிய நாடுகள் தமிழரின் இறையாண்மை சுயநிர்ணய உரிமையை ஏற்க மறுத்திருக்கும் வாய்ப்புண்டு.
சிறிலங்காவின் போர்க்குற்றங்களை கூட தமது சார்பு ஆட்சி மாற்றத்திற்கு தான் 2015 இல் அவை அதிகம் பாவித்தன. போதிய காலம் இருந்தபோதிலும் நீதி விடயத்தில் தமிழ் கூட்டமைப்போ (TNA) உலக தமிழர் பேரவையோ (GTF) இந்தியாவினதும் அமெரிக்காவினதும் ஐக்கிய தேசிய கட்சியின் (UNP) பொம்மையாக செல்பட்டதே அன்றி. தமிழர்களின் நன்மைக்காக அல்லது நீதிக்காக செயல்படவில்லை. விளைவு தமிழர்களின் எஞ்சி உள்ள நிலங்களும் இருப்பும் பறிபோய், சீனாவின் வல்லமை மேலோங்கியது மீண்டும் சீனா சார்பு சிங்கள அரசு நீண்டகால பதவி நோக்கில் உள்ளது. அவர்களால் முதலில் பாதிக்க போவது அநேகமாக முன்னர் சிங்கள அரசுகளுக்கு முட்டு கொடுத்திருக்கும் முஸ்லீம் சமூகமாக தான் இருக்கும். அதன் பின்னர் தான் ஈழ தமிழர்கள் பாதிக்கப்படுவர். ஐநாவின் சிறுபான்மை எனும் வலையில் தமிழர் விழவேண்டிய அவசியமில்லை. தமிழர்கள் பூர்வ குடிகளே அன்றி சிறுபான்மையினரும் அல்லர். பூர்வ குடிகளுக்கு இருக்கும் உரிமை தமிழருக்கு கிடைக்க விடாமல் செய்ய தான் இந்த சிறுபான்மை எனும் சொல் பாவிக்க படுகிறது. தமிழர்கள் பாதிக்க பட்ட இனம் என்பதும் ஐநா ஆவணங்களில் மறைக்கப்படுகிறது.
தமிழீழம் என்பது இறையாண்மை கொண்ட ஈழ தமிழரின் குரியரசு தீர்மானமாக தான் 1976 இல் எடுத்திருந்தனர். அந்த தீர்மானத்தை நிறைவேற்ற அப்போதைய தமிழ் அரசியல் தலைமைகள் (TULF/ITAK) தமிழ் இளைஞர்களை போராடி பெறுங்கள் என்று அழைத்திருந்தது. தமிழீழ விடுதலை புலிகள் எண்ணிக்கையளவில் 1983 வரை முப்பத்திற்கு குறைவு. மற்றைய தமிழ் போராட்ட அமைப்புகளை ஒப்பீடும் பொது 1985 வரை எண்ணிக்கையில் மிக குறைவு. பின்னர் அமெரிக்காவை இலங்கையில் இருந்து வெளியேற்றும் காரணமாகவும் தமிழரின் தமிழீழ தாயக பகுதியை அடையாள படுத்தும் 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் வந்த இந்திய இராணுவம் முதலில் தமிழர் சார்பிலும் பின்னர் தமிழ் எதிர்ப்பு நிலையையும் எடுத்தது. அமெரிக்காவின் செல்வாக்கு நீங்கியதும் தமிழரின் கோரிக்கைகளை காங்கிரஸ் இந்தியா செவிமடுக்கவில்லை. அன்றைய கால பகுதியிலும் புலிகளின் எண்ணிக்கை குறைவு தான் ஆயினும் தமது இருப்பை விட தமிழீழம் எனும் கொள்கையில் உறுதியாக இந்திய இராணுவத்தை எதிர்த்தனர். எண்ணாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட பல ஆயிரம் கொடும் செயல்களை செய்தபின் இந்தியராணுவம் தலைகுனிந்து தமது நாடு திருப்பினர்.
1990 களில் புலிகள் தமிழீழம் என்ற நாட்டை அமைத்தனர். பல அரச கட்டமைப்புகளை சிறிலங்கா இனஅழிப்புக்கு எதிராக போராடிய படி அதே நேரம் கதிரையே கதியாக இருக்கும் தமிழ் அரசியல் வாதிகளையும் பல தமிழ் துணை இராணுவ குழுக்களையும் சமாளித்தபடி 2002 இல் முழுமையான தமிழீழ அரசை உலக அரங்கில் நிறுவியிருந்தனர். பின்னர் சமாதான பேச்சுவார்த்தைகளும் 2004 தீர்வு முன்மொழிவு செய்திருந்தனர். இந்த நிலையில் தான் அவர்களை அழிக்க தமிழ் இறையாண்மையை இல்லாது செய்யும் முகமாக புலிகள் மேல் தடைகளும் வந்திருந்தன. இதில் தமிழர்கள் தமது இறையாண்மை பற்றி பேச கூடாது என்பதாக தான் நகர்வுகள் இருந்தனர். இன்று சிங்கள மக்களின் இறையாண்மையில் ஒரு பகுதி சீனா விடம் உள்ளது. எனவே தமிழரின் இறையாண்மையை கோரிக்கையை மேற்கு, ஐரோப்பிய நாடுகள் நிராகரிக்க முடியாது.
சிறிலங்காவின் தமிழின அழிப்பு பற்றி 2015 இல் வடமாகாண தீர்மானம் மிக தெளிவாக கூறுகிறது. இது ஐநாவிற்கும் அனுப்பப்பட்டு உள்ளது. ஆட்சி மாற்றதில் அக்கறையாக இருந்த தரப்புகள் இதுபற்றி அன்று அக்கறை எடுக்கவில்லை. 2009 இல் தமிழீழ அரசு அழிந்ததன் பின்னர் பல ஆயிரம் தமிழர்கள் சிறிலங்காவினால் கொல்லப்பட்டனர். இந்த இன அழிப்பை நடத்தியதில் கொங்கிரஸ் இந்தியாவுக்கும் அதற்கான வழிகளை செய்து கொடுத்ததில் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் பங்கு உண்டு. இதில் இறுதி போர் காலத்தில் அங்கு எவ்வளவு தமிழர்கள் இருந்தனர் என்பதற்கும் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தமிழர் காயப்பட்டனர் கொல்லப்பட்டனர் என்பதற்கும் ஐநாவில் ஆதாரங்கள் உண்டு. அந்த இன அழிப்பு போருக்கு எதிராக, தமிழீழ அரசின் படைகளாக தான் புலிகள் போராடி மௌனித்தனர். அதன் பின்னர் பல ஆயிரம் போர் கைதிகள் (POW) மற்றும் தமிழ் பொதுமக்களை சிறிலங்கா அரசு கொன்றது. இதை தான் ஐநா போர்க்குற்றம் என்கிறது. இதற்கான போதிய ஆதாரமும் ஐயாவிடம் உண்டு.
இந்த போர்க்குற்ற ஆவணங்களை திரட்டி கொடுத்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை பெற தான் பல புலம் பெயர் தமிழர்கள் 2009 இலிருந்து 2015 வரை பல வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர். 2015 இல் ஐநாவில் 30/1 தீர்மானம் சில குறைபாடுகளுடன் கலப்பு நீதிமன்றை நிறுவ உறுதியளித்து இருந்தது.
ஆட்சிமாற்றத்தின் பின் யாப்பு சீரமைப்பு கனவில் எழுத்து மூல ஒப்பந்தம் கூட பெறப்படாமல் TNA / GTF ரணில் அரசுக்கு முழுமையான ஆதரவை கொடுத்து நீதியை பின்போட்ட விளைவு தான் பின்னர் ராஜபக்சேயின் மீள்வரவுக்கு காரணமாக அமைந்தது. சிங்கள தலைவர்கள் தமது இனம் சார் விடயங்களில் தமது இனத்துக்கு நேர்மையாக இயங்க, தமிழ் தலைவர்களும் சிங்கள இனத்தின் நன்மைக்காகவே தமிழரின் நீதியையும் விட்டு கொடுத்திருந்தனர். இன்று நீதியும் இல்லை TNA / GTF இன் இருக்கையும் இல்லை. என்ற நிலை. தமிழர் வரலாறு நெடியது. பல சவால்களை தாண்டியும் அது நிலைத்திருக்கிறது. கடந்த பத்து வருடத்தில் தமிழீழ வரலாற்றை தூற்றி அதை மூடி மறைக்கும் வேலைகளிலும் TNA /GTF போன்ற தமிழர்தரப்புகளும் ஒத்துழைத்து உள்ளனர்.
இனியாவது வரலாற்றை உணர்ந்து நீண்ட கால நோக்கில் தெளிவுடன் இவர்கள் பணியாற்றவேண்டும் இல்லையேல் ஒதுங்கி இருப்பதும் நன்று.
நீதிக்கான செயல்பாடுகளில் முன்னேற்றம் இருந்தால் தான் ஈழத்தில் தமிழரின் இருப்பும் நிலைக்கும் என்ற நிலை தான் இன்று. தமிழின அழிப்பை அங்கீரித்து அவை தொடராமல் காப்பதும் தமிழீழ வரலாறு அறம் சார்ந்தது என்பதை உலகின் தலைமைகளுக்கு சொல்லக்கூடிய வேலைகளை செய்யக்கூடிய தமிழ் அமைப்புகளையும் ஆர்வலர்களையும் ஊக்குவிப்பது தான் இனிவரும் காலத்தில் தமிழர் சார்பில் செய்யக்கூடியவை ஆகும்.
பின்வரும் நான்கு கோரிக்கைகள் ஐநா விற்கு தமிழர்களால் 2021 இல் ஒருமனதாக வைக்கப்பட்டது.
2015 இல் ஈழத்தில் வடமாகாண சபையில் ஒரு மனதாக நிறைவேறிய தீர்மானம் பின்வரும் கைநூலில் முதலில் உள்ளது.




Comments
Post a Comment